மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் சர்வதேச தொண்டர் நிறுவனத்தினர் நேற்று(08) காலை 9.30 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் வைத்து மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இக் கலந்துரையாடலின் போது தற்போதைய காலத்தில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் தமது செயற்றிட்டத்தினை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்றகாக டீசலினை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கு பதிலளித்த மாவட்ட அரசாங்க அதிபர் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு இது தொடர்பில் தெரியப்படுத்தி நடவடிக்கையெடுப்பதாக தெரிவித்தார்.
மேலும் குறித்த பகுதியில் சுமார் 450 தொடக்கம் 500 பணியாளர்கள் தங்கியிருந்து பணியாற்றுவதால் அவர்களுக்கான உணவுத்தேவைக்காக அம்மாச்சி போன்றதான ஓர் உணவகத்தை அமைப்பது தொடர்பிலும் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர். அதனூடாக வேலை வாய்ப்புக்கள் உருவாகுவதுடன் தமது பணி நடவடிக்கைகள் இலகுவாக்க முடியும் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தனர். இது தொடர்பில் உரிய தரப்பினருக்கு தெரியப்படுத்தி பரிசீலிப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
குறித்த சந்திப்பில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் சர்வதேச தொண்டர் நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் ஸ்ரிபன் ஹோல், நடவடிக்கை முகாமையாளர் விதூசன் அன்ரனி, அலுவலக முகாமையாளர் பா.ஜெயராஜிதன், அளவைகள் மற்றும் இணைப்பு அலுவலர் அருள்நேசராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.
குறித்த தொண்டர் நிறுவனமானது யாழ்ப்பாணத்தில் 2002ம் ஆண்டு தமது பணியினை ஆரம்பித்து பின் படிப்படியாக 2009இல் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பகுதியிலும் பின் 2020ம் ஆண்டிலிருந்து கொக்குத்தொடுவாய் பகுதியில் தமக்கான அலுவலகத்தினை அமைத்து மணலாறு பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு